20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.. கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு...

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாகளுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.

Update: 2023-02-07 15:17 GMT

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று பேசியதாவது:

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ன ஆனது?. தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப் போகிறீர்களா?. தற்போதைய மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 27 முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது; தேர்தல் வாக்குறுதியிலும் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால் அந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை, அதற்காக நீங்கள் ஒன்றும் செய்யவில்லை; நீங்கள் மக்களுக்காகவோ, நலிவடைந்தவர்களுக்காகவோ, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவோ கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் எதுவும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை.

அதனால் நானே குறிப்பிடுகிறேன். இடிப்பாரை இல்லாத எமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் எனும் என்பது குறள். அதை ஆங்கிலத்திலும் பொழிபெயர்பு செய்கிறேன். ஏனென்றால் தென்னிந்திய மொழிகள் எதுவும் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஹிந்தி மொழியை மட்டும் திணிக்கிறீர்கள்.

சமஸ்கிருதத்தை விட பழமையான தமிழ் மொழிக்கு வெறும் 11 கோடி மட்டுமே ஒதுக்குவது ஏற்புடையதில்லை. அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. அதானி பற்றிய அறிக்கையை இந்தியாவுக்கு எதிரானதாக எப்படி கருத முடியும்.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால், பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை; ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. பேசினார்.

Tags:    

Similar News