அக்னிபாத் திட்டத்தில் சேர விருப்பமா? ஆகஸ்ட் 17 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர விரும்புவம் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-08 14:41 GMT

மத்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் சேர விரும்புவம் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை என்ற agnipathvayu.cdac.in இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு அக்டோபர் 13 ஆம் தேதி நடத்தப்படும். 2003 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.

உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டி மீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டி மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். இந்தத் தேர்வானது மூன்று முறைகளை கொண்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய மூன்று நிலைகளை உடையது. கல்வித் தகுதி விவரம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய விமானப்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றலாம். ஆக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் சுமார் 50,000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். அந்தப் பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் பணிமுடிந்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து தேர்வில் கலந்துக்கொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News