சிறிய செயற்கைக்கோளை உருவாக்க இந்தியா-மொரீஷியஸ் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறிய செயற்கைக்கோளை உருவாக்கும் இந்தியா-மொரீஷியஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2024-01-05 15:30 GMT

பைல் படம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, மொரீஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் இடையே சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்கும் ஒத்துழைப்புக்கு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மொரீஷியஸ் குடியரசின் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் புத்தாக்க அமைச்சகத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் மொரீஷியஸ் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கவுன்சில் இடையே நவம்பர் 01, 2023 அன்று மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சிறிய செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு தொடர்பானது.

கூட்டு செயற்கைக்கோளை உருவாக்குவதில் இஸ்ரோ மற்றும் எம்.ஆர்.ஐ.சி இடையே ஒத்துழைப்புக்கான கட்டமைப்பையும், எம்.ஆர்.ஐ.சியின் தரை நிலையத்தைப் பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பையும், உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

இஸ்ரோ/ இந்தியாவின் ஏவுகலம் மற்றும் செயற்கைக்கோள் பயணங்களுக்கு முக்கியமான மொரீஷியஸில் உள்ள இந்திய தரை நிலையத்திற்கு மொரீஷியஸ் அரசின் தொடர்ச்சியான ஆதரவை மேலும் உறுதிப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும். கூடுதலாக, எதிர்காலத்தில் இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் திட்டத்திற்கு மலேசியாவின் தரை நிலையத்திலிருந்து எம்.ஆர்.ஐ.சி ஆதரவை உறுதிப்படுத்தவும் உதவும். இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இஸ்ரோவும், எம்.ஆர்.ஐ.சியும் சிறிய செயற்கைக்கோளைக் கூட்டாக உருவாக்க முடியும். 15 மாத கால அவகாசத்தில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்.

இந்தக் கூட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த ரூ.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசே ஏற்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வேறு எந்த நிதிப் பரிமாற்றமும் இல்லை.

Tags:    

Similar News