கஸ்டடி மரணங்களில் குஜராத் முதலிடம்: மத்திய அரசு தகவல்

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் 80 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-02-13 15:15 GMT

பைல் படம்.

மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் மாநிலங்களவையில் நாடு முழுவதும் நடந்த கஸ்டடி மரணங்கள் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத்தில் 80 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மஹாராஷ்டிராவில் 76, உத்தரப்பிரதேசத்தில் 41, தமிழ்நாட்டில் 40, பீஹாரில் 38 கஸ்டடி மரணங்களும் நடந்துள்ளன. இது கடந்த 2017 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை நடந்த கஸ்டடி மரணங்களின் எண்ணிக்கையாகும்.

2017-18 காலகட்டத்தில் 146 கஸ்டடி மரணங்களும், 2018-19 காலகட்டத்தில் 136 கஸ்டடி மரணங்களும், 2019-20 காலகட்டத்தில் 112 கஸ்டடி மரணங்களும், 2020-21 காலகட்டத்தில் 100 கஸ்டடி மரணங்களும், 2021-22 காலகட்டத்தில் 175 கஸ்டடி மரணங்களும் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-22 காலகட்டத்தில் மட்டும் குஜராத்தில் 24 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இவற்றில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 201 வழக்குகளில் ரூ.5.80 கோடி நிவாரணம் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. சிக்கிம் மற்றும் கோவாவில் 2017-20 வரை ஒரு கஸ்டடி மரணம் கூட பதிவாகவில்லை. ஆனால், 2021-22 காலகட்டத்தில் இரண்டிலும் ஒரு கஸ்டடி மரணம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News