கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க கோரி வழக்கு

கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கோரிய மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Update: 2022-03-29 03:31 GMT

திமுக செய்தித் தொடர்பு செயலாளர் வக்கீல் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது மேல்முறையீட்டு மனுவில், மாதவ் காட்கில், கஸ்தூரி ரங்கன் கமிட்டிகள் அளித்த பரிந்துரைகள் படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சுற்றுச்சூழல், உயிரினங்கள், வன வளங்கள், நீர்நிலைகளை பாதுகாக்க நிரந்தர குழுவை அமைக்க மத்திய அரசு, தமிழகம், குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காட்டு வளங்களை அழிக்கும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், மலைகளை பாதுகாக்க தேவையான திட்டத்தை வகுத்து, சமர்பிக்க மத்திய அரசு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ந் தேதியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆஜராகி, இதே விவகாரத்தில் தாக்கல் செய்த வேறு மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அளித்துள்ளது என வாதிட்டார்.

வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க, மத்திய அரசு, தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா உள்பட 12 மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News