உத்தவ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் காலக்கெடு
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஜூன் 30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, சிவசேனா அரசுக்கு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசுடன் இணைந்து அமைத்துள்ள மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகி பா.ஜ.கவுடன் இணைய வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியில் 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என தகவல் வெளியானது. இதில் 39 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சிய 7 பேர் சுயேட்சைகள் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனவும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரியும் மகாராஷ்டிரா ஆளுனரிடம் பாஜக கோரியுள்ளது.
இதையடுத்து மராட்டிய அரசு நாளை (ஜூன் 30)பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையை சபாநாயகர் நாளை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு நம்பிக்கை தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.