மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை

Update: 2021-04-15 11:15 GMT

கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவ ஆக்ஸிஜன் முக்கியமானதாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட் தொற்று சமயத்தில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய தொழில்துறை வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகபத்ரா தலைமையில், மூத்த அதிகாரிகள் அடங்கிய அமைச்சகங்களுக்கு இடையேயான, அதிகாரம் பெற்ற குழு-2 அமைக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக, இந்தக் குழு மருத்துவ ஆக்ஸிஜன் சீராக கிடைப்பதை, தொடர்ந்து கண்காணித்து வந்தது. தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ள சூழ்நிலையில், இந்தக் குழு மீண்டும் கூடி, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு போதிய அளவில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தக் குழு, மாநிலங்கள், ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் மற்றும் இதன் விநியோகத்தில் தொடர்புடையவர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறது.

நாட்டில் ஆக்ஸிஜனின் தினசரி உற்பத்தி 7127 மெட்ரிக் டன்னாக உள்ளது. இது தவிர எஃகு ஆலைகளில் கிடைக்கும் கூடுதல் ஆக்ஸிஜன் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரித்துள்ளதால், மத்தியக்குழு ஆணையின் படி கடந்த இரண்டு நாட்களாக ஆக்ஸிஜன் மொத்த உற்பத்தி 100 சதவீதமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆக்ஸிஜனை, மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வது தற்போது சவாலாக உள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் கீழ், ரயில்வே அமைச்சகம், மாநிலங்களின் போக்குவரத்து துறைகளுடன் இணைந்து ஒரு துணைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர்களின் போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News