அரசு இ மார்க்கெட் வணிக சேவை: 3 வது இடத்தில் தமிழகம்
முதல் இடத்தில் மஹாராஷ்ட்டிரா மாநிலமும், 2-வது இடத்தில் உத்தர பிரதேச மாநிலமும் இருப்பதாக அரசு இ-மார்க்கெட் சிஇஓ பிரசாந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.;
பைல் படம்.
இதுகுறித்து அரசு இ- மார்க்கெட் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமார் சிங் கூறியதாவது:
மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் இருந்து 8 லட்சத்து 83 ஆயிரத்து 907 வணிக நிறுவனம் அரசு இ- மார்க்கெட் தளத்தில் பதிவு செய்து வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு அடுத்த இடத்தில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 946 பேர் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பதிவு செய்துள்ளனர். 3-வது இடத்தில் தமிழகத்தில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 961 பேர் பதிவு செய்து வணிகம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விற்பனையாளர்கள் அரசு இ-மார்க்கெட் மூலம் 7 ஆயிரத்து 185 கோடி மதிப்பிலான ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். தமிழக அரசு நிறுவனங்கள் அரசு இ-மார்க்கெட் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ஆயிரத்து 90 கோடி மதிப்பிலான கொள்முதல் செய்துள்ளன.
தமிழகத்தில் வரும் நாட்களில் அரசு இ- மார்க்கெட் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி, அதிக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்க, மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் தளவாட சேவைகளை வழங்க போதுமான நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அனைத்து மாநிலங்களிலும் அவற்றுக்கான ஒரே மாதிரியான ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பின்பற்றுவதற்கும் அந்தந்த மாநிலங்களில் அலுவலகங்கள் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.