ரேஷன் கடைகளில் 2028 வரை இலவச அரிசி: ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை

ரேஷன் கடைகளில் 2028 வரை இலவச அரிசி வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது.

Update: 2024-10-09 11:45 GMT

ஏழைகளுக்கு 2028 வரை அரிசி உள்ளிட்ட இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மோடி அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது

இப்போது ஏழைகளுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்கள் தொடர்ந்து கிடைக்கும். இலவச தானிய திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இனி 2028 வரை ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை அரசு வழங்கும் என்றார்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் அரிசிக்கு பதில் அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவான கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. மாநிலங்கள் வழங்கும் இந்த இலவச உணவிற்கான செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. அவ்வப்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு இதற்கான நிதியை விடுவித்து வருகிறது.

மோடி அரசாங்கம் புதன்கிழமை (9 அக்டோபர் 2024) பல திட்டங்களுக்கு பச்சை சமிக்ஞை கொடுத்தது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா (PMGKAY) மற்றும் பிற நலத் திட்டங்களின் கீழ் ஜுலை 2024 முதல் டிசம்பர் 2028 வரை இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன் முழுச் செலவும் சுமார் 17,082 கோடி ரூபாய் என்றும், அதை மத்திய அரசு ஏற்கும் என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 2022 இல் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) மார்ச் 2024 க்குள் நாடு முழுவதும் அரிசி வலுவூட்டல் முயற்சியை செயல்படுத்த முடிவு செய்தது. இப்பணியை கட்டம் கட்டமாக மேற்கொள்ள வேண்டும். இது வரை மூன்று கட்டங்களாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஏழைகளுக்கு இலவச கலப்பட அரிசியை வழங்குவதன் மூலம் இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் சாலை திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பகுதிகளில் 2,280 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இதற்காக மொத்தம் ரூ.4,406 கோடி செலவிடப்படும்.

மேலும், குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை (NMHC) மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக முடிக்கப்படும். வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதும், உலகின் மிகப்பெரிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்

Tags:    

Similar News