முர்முவை தொடர்ந்து, யஷ்வந்த் சின்ஹாவுக்கும் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு அதிரடி..!

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-24 06:35 GMT

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா.

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24 ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத்தலைவர் ஜூலை மாதம் 25 ம் தேதி பதவி ஏற்க வேண்டும். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 9 ம் தேதி வெளியிட்டது. இதன்படி அடுத்த மாதம் 18 ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ம் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 29 ம் தேதி கடைசி நாள்.

இதற்கிடையே, குடியரசத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார். யஷ்வந்த் சின்கா, பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1984-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்தில் குதித்தார். யஷ்வந்த் சின்கா, சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர். மேலும் வாஜ்பாய் பிரதமர் பதவி வகித்தபோது மத்திய நிதி அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் சின்கா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு 24 மணிநேரமும், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளித்து கடந்த 22 ஆம் தேதி மத்தியஅரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது, எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கும் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News