அமைச்சர் வீட்டில் ரெய்டு - சிக்கியது கோடிக்கணக்கில் பணம்; பரபரப்பு

சுகாதார அமைச்சரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், ரூ.2.82 கோடி ரொக்கம் 133 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது, டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-06-07 12:30 GMT

சத்யேந்தர் ஜெயின்

டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர், சத்யேந்தர் ஜெயின்.

பிரயாஸ், அகிசந்த் டெவலப்பர்ஸ், மங்கள்யத்தன் ஆகிய கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனங்களில் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மற்றும் அவரது மனைவிக்கு மூன்றில் ஒரு பகுதி பங்குகள் இருப்பதாக சொல்லியும் போலியான நிறுவனங்கள் மூலம் நிதி மோசடி நடத்தியதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்ட ஆறு பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சத்தியந்திர ஜெயின், மே மாத இறுதியில் கைது செய்யப்பட்டார். வரும் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்த, டெல்லி நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீடு, உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2.82 கோடி ரொக்கப் பணம், 133 தங்க நாணயங்கள் உட்பட 1.80 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைக்கான ஆவணங்கள் குறித்து டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம், டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News