நீங்க சொந்த வீடு கட்ட வேண்டுமா? இதோ ரூ.79 ஆயிரம் கோடி இருக்குங்க...

நீங்க சொந்த வீடு கட்ட வேண்டுமா? மத்திய அரசு பட்ஜெட்டில் இதற்கு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-02-01 12:57 GMT

மத்திய பட்ஜெட்டில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அடுத்தாண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. எனவே, வெகுஜன மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட் மீதான எதிபார்ப்பு கூடுதலாகவே இருந்தது.

இந்நிலையில், அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றப்பின் நாட்டின் உள்ள அனைத்து மக்களுக்கும் வீடு மலிவு விலை வீடு என்ற நோக்கில் 2015 பிரதமரின் ஆவாஸ் யோஜ்னா என்ற அனைவருக்கும் வீடு திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு பிரத்தியேகமாக PMAY- Urban, PMAY- Rural என இரு பிரிவுகளாக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் உதவித்தொகையுடன் குறைந்த வட்டியின் கீழ் வீடு கட்டிக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2023-24 நிதியாண்டில் பிரதமரின் ஆவாஸ் திட்டத்திற்கு ரூ.79,000 கோடி செலவிட அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது.

முதலில் இந்த திட்டம் 2022ஆம் ஆண்டு வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் 2024ஆம் ஆண்டு வரை திட்டத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிராமப்புற மக்களுக்கு மலிவு விலை வீடு திட்டத்தை கொண்டு சேர்க்க அரசு முழு வீச்சில் செயல்பட முனைப்பு காட்டுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே இந்த திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெறலாம், விண்ணப்ப விதிமுறைகள் போன்ற விவரங்களை https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News