அமளி காரணமாக டெல்லி மேயர் தேர்தல் 3வது முறையாக ரத்து

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-02-06 07:59 GMT

டெல்லி மாநகராட்சியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஆல்டர்மென்களுக்கு வாக்களிக்கும் உரிமையை எதிர்த்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் மூன்றாவது முறையாக நடைபெற்ற சபை நடவடிக்கைகள் தடைபட்டன.

ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து 135 கவுன்சிலர்களும் கையெழுத்திட்ட கடிதத்தில், நியமனம் செய்யப்பட்ட தனிநபர்கள் அரசியலமைப்பு மற்றும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின்படி வாக்களிக்க தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேயர் தேர்தலில் செல்வாக்கு செலுத்தவும், சூழ்ச்சி செய்யவும் பாஜக முயற்சித்ததாகவும் அவர்கள் கூறினர்.

சபையில் அமளி காரணமாக மேயர் தேர்தல் நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன், இரண்டு முறை மேயர் தேர்தல் குழப்பத்தை சந்தித்துள்ளது. டெல்லி மாநகராட்சியின் முதல் கூட்டம் ஜனவரி 6 அன்று நடைபெற்றது, ஆம் ஆத்மி மற்றும் பிஜேபி கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்கியதால் அமளியில் முடிந்தது. ஜனவரி 24 அன்று, மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது முயற்சியும் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் தோல்வியடைந்தது.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 1957ன் படி , மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு கூடும் சபையின் முதல் அமர்வில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சி தேர்தல் நடந்து இரண்டு மாதங்களாகியும் டெல்லிக்கு மேயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை

Tags:    

Similar News