சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2023-08-29 11:29 GMT

தற்போது சமையல் எரிவாயு எல்.பி.ஜி.வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் 14.2 கிலோவின் விலை ரூ. 1.103 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒவ்வொரு நகரங்களிலும் இதன் விலை மாறுபடும். தமிழகத்தில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1110 முதல் ரூ.1150 வரை என உள்ளது. கடைசியாக மார்ச் 1 ஆம் தேதி ரூ. 50 விலையேற்றம் செய்யப்பட்டது.


கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மானிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து சிலிண்டர் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்தது.

ஒட்டு மொத்தமாக கியாஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கியாஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


சிலிண்டர் விலை குறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடியால் 2016 மே 1 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 கோடி கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

கியாஸ் சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News