சென்னை - சூரத் விரைவுச்சாலை பணிக்கான ஒப்பந்தம்: 14 நிறுவனங்கள் ஆர்வம்

சென்னை - சூரத் விரைவுச் சாலை திட்டத்தில், சோலாப்பூர்-கர்னூல்-சென்னை பொருளாதார வழித்தடத்தின் (NH-150C) 38.2 கி.மீ., தொகுப்பு- 2 பணிகளுக்கு, 14 கட்டுமான நிறுவனங்கள், ஏலம் கேட்புக்கு விண்ணப்பித்துள்ளன.

Update: 2022-02-14 14:15 GMT

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், பாரத்மாலா திட்டம் என்ற பெயரில், 2.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா எல்லைப் பகுதிகள், கடலோர பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் 100 மாவட்டத் தலைநகரங்களை இணைக்கும், 25,000 கி.மீ. நீளமுள்ள சாலை கட்டமைப்பை ஏற்படுத்துகிறது.

இதன்கீழ் தெற்கு தொகுப்பில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1450 கிமீ தொலைவுக்கு, நாசிக், அகமதுநகர், சோலாப்பூர், கலபுர்கி, கர்னூல், கடப்பா மற்றும் திருப்பதி வழியாகச் செல்லும் பசுமைவழி ஆறு வழி விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இது, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்கிறது.

இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது; அதன்படி, 2 வருட காலக்கெடு மற்றும் ரூ. 869.1 கோடி மதிப்பீடில் செயல்படுத்தப்படும் இந்த மெகா திட்டத்திற்கு ஏலங்கள், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கோரப்பட்டன.

இதில், பிஎஸ்ஆர் இன்ஃப்ராடெக் இந்தியா லிமிடெட், திலீப் பில்ட்கான் லிமிடெட், தினேஷ்சந்திரா ஆர் அகர்வால் இன்ஃப்ராகான் லிமிடெட், கேஎம்வி ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட், கேபிசி ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் உள்பட 14 கட்டுமான நிறுவனங்கள், ஏலம் கோரியுள்ளன.

ஏலங்கள் தற்போது, தொழில்நுட்ப ஏல மதிப்பீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன; இச்செயல்முறைகள் நிறைவு பெற, இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறைந்த மதிப்பில் கோரிய ஏலதாரர் மற்றும் அதிகபட்ச தொகை கோரிய ஒப்பந்ததாரர் யார் என்பது தெரியவரும். 

Tags:    

Similar News