ஜனாதிபதி மாளிகையில் உள்ள கார்டன் பெயரை மாற்றிய மத்திய அரசு

Update: 2023-01-28 17:45 GMT

மொஹல் கார்டன் (பைல் படம்). 

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முகல் கார்டன் எனும் பெயரில் தோட்டம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கலைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தோட்டம் இயற்கை சூழ அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவ தோட்டம், வட்ட வடிவ தோட்டம், மூலிகை தோட்டம், ஆன்மீக தோட்டம், இசை தோட்டம் என பல தோட்டங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இடம்பெற்றுள்ளன.

முகல் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்பட்டு வந்தது. இத்தோட்டம் பாரசீக கலை வடிவில் முகலாய அரசர் பாபரால் உருவாக்கப்பட்டது. இத்தோட்டத்தை போன்று காஷ்மீர், டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அமைந்துள்ளது.

முகல் கார்டன் எனும் இத்தோட்டத்தின் பெயரை மாற்றி அம்ரித் உதயான் என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலக பத்திரிகை இணைச் செயலர் நாவிகா குப்தா தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை "சுதந்திர இந்தியாவின் அமிர்த பவள விழா" என இந்திய அரசு அனுசரித்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்துள்ளதாக குடியரசு மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகல் கார்டன் எனும் இந்த தோட்டம் "அம்ரித் உதயான்" தோட்டம் என்ற பெயரில் நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவிக்க உள்ளார். இதன் பின்னர் புதுப்பிக்கப்பட்ட அம்ரித் உதயான் தோட்டத்தினை காண இணைய புக்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News