காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகம் கறார்

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா கறார் ஆக கூறி உள்ளது.

Update: 2024-04-30 11:59 GMT

கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததால் குளம் போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று நடந்தது. இதில், கர்நாடகாவில் உள்ள 4 முக்கிய அணைகளில் உள்ள நீர், இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறக்க முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாக கூறியது

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் அதிகாரிகள் பங்கேற்றார். காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், "ஜூன் 1   2023 முதல் ஏப்ரல் 28   2024 வரை அதாவது நேற்று முன்தினம் வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 174 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும். ஆனால் வெறும் 75 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 95 டிஎம்சி தண்ணீர் தரவேண்டியது நிலுவையில் இருப்பதாகவும்" தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தவிர பிப்ரவரி மாதத்தில் இருந்து வருகிற 28 ம் தேதி வரை சுமார் 7.3 டிஎம்சி அளவு தண்ணீரை சுற்றுச்சூழல் நீராக கர்நாடகா தந்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைக்கப்பெற்று இருப்பதாகவும், 5.3 டிஎம்சி தண்ணீர் குறைத்து தந்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து கர்நாடக அரசு வைத்த வாதத்தில், "கர்நாடகாவில் உள்ள 4 முக்கிய அணைகளில் உள்ள நீர், இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே உள்ளது. இதனால் மேலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியது".

தொடர்ந்து கூறிய காவிரி ஒழுங்காற்று குழு, "கர்நாடகா அரசு மே மாதத்திற்கான சுற்றுச்சூழல் நீரின் அளவான 2.5 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி தமிழகத்திற்கு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது. அப்போது தமிழக அரசு சார்பில், தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய பாக்கியாக உள்ள 5.3 டிஎம்சி தண்ணீரையும் சேர்த்து திறந்து விட வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதற்கு உத்தரவிட முடியாது என்று காவிரி ஒழுங்காற்று குழு தெரிவித்தது.

Tags:    

Similar News