பட்ஜெட் இளைய இந்தியாவின் விருப்பங்களின் பிரதிபலிப்பு: பிரதமர் மோடி

பட்ஜெட் இளைய இந்தியாவின் விருப்பங்களின் பிரதிபலிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-01 15:48 GMT

பிரதமர் மோடி.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் "வெறுமனே இடைக்கால பட்ஜெட் என்றில்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான பட்ஜெட்" என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். "இந்த பட்ஜெட் தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது" என்று பிரதமர் மோடி உறுதிபடக் கூறினார். "இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவின் தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டிய பிரதமர்  மோடி, "நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான பட்ஜெட்" என்று கூறினார். இந்த பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

"இந்த பட்ஜெட் இளைய இந்தியா விருப்பங்களின் பிரதிபலிப்பாகும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துரைத்த அவர், "ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், பட்ஜெட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், மொத்த செலவினம் இந்த பட்ஜெட்டில் வரலாறு காணாத வகையில் ரூ.11,11,111 கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "பொருளாதார நிபுணர்களின் மொழியில், இது ஒரு வகையான இனிமையான இடம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவில் 21-ம் நூற்றாண்டின் நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும் அவர் கூறினார். வந்தே பாரத் ரயில் தரத்தில் 40,000 நவீன பெட்டிகளைத் தயாரித்து அவற்றைப் பயணிகள் ரயில்களில் இணைப்பதற்கான அறிவிப்பு குறித்தும் அவர் தெரிவித்தார். இது நாட்டின் பல்வேறு ரயில் பாதைகளில் கோடிக்கணக்கான பயணிகளின் வசதி, பயண அனுபவத்தை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

லட்சிய இலக்குகளை நிர்ணயிப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறோம், அதை அடைகிறோம், பின்னர் இன்னும் பெரிய இலக்கை நாங்களே நிர்ணயிக்கிறோம்" என்று கூறினார். ஏழைகள், நடுத்தர மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், கிராமங்கள், நகரங்களில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்படுவது குறித்தும், மேலும் 2 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கை அதிகரிப்பது குறித்தும் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்திய பிரதமர்மோடி, " 2 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். தற்போது, இந்த இலக்கு 3 கோடி 'லட்சாதிபதி'களாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கியதற்காகவும், அதன் பயன்களை அங்கன்வாடி, ஆஷா பணியாளர்களுக்கு விரிவுபடுத்தியதற்காகவும் பிரதமர் மோடி பாராட்டினார்.

இந்த பட்ஜெட் மூலம் ஏழை, நடுத்தர மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று பிரதமர்மோடி வலியுறுத்தினார். மேற்கூரை சூரியசக்தி மின்சாரத் தகடு இயக்கத்தின் மூலம் 1 கோடி குடும்பங்கள் இலவச மின்சாரத்தைப் பெறுவார்கள் என்றும், அதிகப்படியான மின்சாரத்தை அரசுக்கு விற்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை வருவாய் ஈட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடுத்தர வகுப்பைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி தள்ளுபடித் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நானோ டிஏபி பயன்பாடு, விலங்குகளுக்கான புதிய திட்டம், பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்ட விரிவாக்கம், தற்சார்பு எண்ணெய் வித்து இயக்கம் ஆகியவை விவசாயிகளின் வருவாயை அதிகரித்து செலவுகளைக் குறைக்கும் என்று குறிப்பிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் அறிக்கையையொட்டி மக்கள் அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News