ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2024-10-14 06:06 GMT

மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து, விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தற்போது டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விமானம் தற்போது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளும் விடாமுயற்சியுடன் பின்பற்றப்படுகின்றன என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து பயணிகளும் இறங்கி, டெல்லி விமான நிலைய முனையத்தில் உள்ளனர். இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க எங்கள் சக ஊழியர்கள் உறுதி செய்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளது. 

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஓடுபாதையில் விமானம் நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு தடுப்புக் குழு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் தீவிர சோதனையில் ஈடுபட்டன. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் இண்டிகோ மும்பை-மஸ்கட் 6E1275 மற்றும் இண்டிகோ மும்பை-ஜெத்தா 6E56. விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்து. இந்த மிரட்டலும் புரளி என விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, லண்டன்-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. லண்டனில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா விமானத்தில் கிட்டத்தட்ட 290 பயணிகளுடன் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் தேசிய தலைநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து நிலையான நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு விமானத்தின் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் இது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.

Tags:    

Similar News