இலங்கையில் கலவரக்காரர்களை சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு உத்தரவு

இலங்கையில் கலவரக்காரர்களை சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-05-10 14:22 GMT
இலங்கையில் ஒரு கலவர காட்சி.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால் இவை அனைத்திற்கும் காரணம் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தான் என கருதி அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு சொத்துக்களும் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டு வருகிறது.

நாட்டு மக்களின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜபக்ச குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்கி இருப்பதாக ஒரு தகவல் உள்ளது. நாட்டில் வன்முறை வெடித்து உள்ளதால் அங்கு ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளது .ஆனாலும் கலவரக்காரர்கள் அரசு சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை தீ வைத்து கொளுத்தி சூறையாடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு பதட்டமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. வன்முறைக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் கலவரக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக இராணுவத்தினர் நகரின் முக்கிய வீதிகளில் டாங்கிகளுடன் ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

Tags:    

Similar News