4வது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்

Update: 2024-06-12 04:30 GMT

பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு 

சந்திரபாபு நாயுடு 1995 இல் முதல் முறையாக பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார் மற்றும் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தார். 2014 ஆம் ஆண்டில் அவர் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார் மற்றும் 2019 வரை பதவியில் இருந்தார்.

2024 தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாயுடு நான்காவது முறையாக மீண்டும் முதல்வராகிறார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 164 இடங்களுடன் சட்டசபையில் பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21 தொகுதிகளை இந்தக் கூட்டணி கைப்பற்றியது.

இன்று காலை 11.27 மணிக்கு கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி ஐடி பூங்காவில் 74 வயதான நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். ஜன சேனா கட்சி (ஜேஎஸ்பி) தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர பிரதேச தலைவர் கே. அட்சன்நாயுடு, ஜனசேனா கட்சியின் அரசியல் விவகாரக் குழுத் தலைவர் நாதெண்டலா மனோகர் உள்ளிட்ட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர். . பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சில மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு அமராவதி மாநிலத்தின் தலைநகரம் என்று அறிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மூன்று மாநிலத் தலைநகரங்கள் என்ற பெயரில் மாநிலத்தின் எதிர்காலத்துடன் தனது அரசு விளையாடாது என்றும், வளர்ச்சியைத் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"10 ஆண்டுகளுக்குப் பிறகும், எங்கள் மாநிலத்தின் தலைநகரம் எங்கே என்று சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை," என்று அவர் கூறினார், மாநில தலைநகராக அமராவதியின் வளர்ச்சியை நிறுத்தியதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முந்தைய அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.

2019 ஆம் ஆண்டில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கம், அமராவதியை மாநிலத் தலைநகராக மாற்றுவதற்கு முந்தைய தெலுங்கு தேசம் கட்சியின் அரசாங்கத்தின் முடிவை மாற்றி, மூன்று மாநில தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தது. விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும் YSCRP அரசாங்கம் முன்மொழிந்தது.

அமராவதி தலைநகர் திட்டத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும், முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News