பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆதார் கார்டுகள்: இதோ வந்து விட்டது

பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆதார் கார்டுகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதனை எப்படி பெறுவது என பார்ப்போமா?

Update: 2024-06-30 09:52 GMT

ஆதார் கார்டுகளில் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட விதவிதமான ஆதார் கார்டுகளை நீங்கள் எளிதாக ஆன்லைன் மூலமே வாங்க முடியும். இத்தனை காலம் பிவிசி வகை ஆதார் கார்டுகளை ஆர்டர் செய்தாலும் டெலிவரி செய்யாமல் இருந்தனர். இனி ஆர்டர் செய்ததும் 30 நாட்களில் பிவிசி கார்டுகளை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆதார் அமைப்பான UIDAi இதற்கான அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டது. ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியமாகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட ஆதார் கார்டுகளிலேயே 4 வகைகள் உள்ளன. 

ஆதார் லெட்டரை வகை என்பது லெட்டர் அடிப்படையிலான லேமினேட் செய்யப்பட்ட ஆதார் கடிதம் ஆகும். இதில் ஆதார் அட்டை கொடுக்கப்பட்ட வெளியிடப்பட்ட தேதி மற்றும் QR குறியீடு இருக்கும். புதிய பதிவு அல்லது பயோமெட்ரிக் மாற்றம், மொத்தமாக ஆதார் புதுப்பிப்பு செய்யப்பட்டால், புதிய ஆதார் அட்டை சாதாரண தபால் மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். ஆதார் கடிதத்தை அது வரை தாற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த ஆதார் கடிதம் இருந்தால் மட்டுமே தபாலில் வரும் கார்டை வாங்க முடியும்.

eAadhaar என்பது ஆதாரின் மின்னணு வடிவமாகும். இது UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் பாதுகாப்பான QR குறியீடு இடம்பெற்று இருக்கும். அதேபோல் ஆன்லைனில் திறக்க கடவுச்சொல் கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் eAadhaar/masked eadhaar ஐ எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். அதற்கு ஓடிபி வரும். eAadhaar/masked eAadhaar பொதுவாக ஆதார் கார்டில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டும்.

அடுத்து ஆதார் பிவிசி கார்டு என்பது UIDAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதாரின் சமீபத்திய வடிவமாகும். எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் வலிமையானது. PVC-அடிப்படையிலான ஆதார் அட்டையானது டிஜிட்டல் முறை மூலம் கையொப்பமிடப்பட்ட ஆதார் ஆகும். இது டேம்பர் ப்ரூஃப் கொண்டது. அதேபோல் தண்ணீரில் விழுந்தாலும் வீணாகாது.

சாதாரண கார்டை விட இந்த கார்ட் வலிமையாக இருக்கும். அதேபோல் நீண்ட காலம் உழைக்கும். பாதுகாப்பானதும் கூட. uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையை பெற முடியும். இதற்கு கட்டணம் ரூ. 50 செலுத்தி மேற்கண்ட பக்கத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அல்லது மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தி பிவிசி கார்டை பெற முடியும்.

இந்திய அஞ்சல் சேவையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரியில் வசிப்பவருக்கு டெலிவரி செய்யப்படும். 7 நாட்களில் இந்த புதிய பிவிசி ஆதாரை நீங்கள் உங்கள் வீட்டு விலாசத்தில் பெற முடியும். இந்த பின்வரும் கார்டில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

1. டேம்பர் ப்ரூஃப் QR குறியீடு 2. ஹாலோகிராம் 3. மைக்ரோ எழுத்து 4. கோஷ்ட் படம் 5. வெளியீட்டு தேதி & அச்சு தேதி 6. பாதுகாப்பிற்கான Guilloche பேட்டர்ன் 7. ஆதார் லோகோ ஆகியவை உள்ளன.

Tags:    

Similar News