கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 22 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 22 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-01-02 16:18 GMT

இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.

முன்பெல்லாம் மாரடைப்பு என்பது பொதுவாக வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் இடையே தான் ஏற்படும். ஆனால், இப்போது அனைவருக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இது ரொம்பவே மோசமாகிவிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்கள், அவ்வளவு ஏன் குழந்தைகளுக்குக் கூட சமீப காலங்களாக மாரடைப்பு ஏற்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 22 வயது இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த அந்த நபர் இந்தல் சிங் ஜாதவ் பன்ஜாரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். கார்கோன் மாவட்டத்தின் பல்வாடா என்ற இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தல் சிங் பவுலிங் போட்டுள்ளார். அப்போது திடீரென அவருக்கு ஏதோ ஒரு அசவுகரியம் ஏற்படவே, அவரால் சரிவர விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை பஞ்சாரா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார் என்று பத்வா சிவில் மருத்துவமனையின் டாக்டர் விகாஸ் தல்வேர் தெரிவித்து உள்ளார். கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது இளைஞருக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. இதைப் பார்த்துப் பதறிய அவரது நண்பர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிரிக்கெட் விளையாடும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதை அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்படவே, அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் என்றனர்.

இந்தல் சிங் பர்கத் தாண்டா கிராம அணிக்காக விளையாடியுள்ளார். முதலில் அவரது டீம் பேட்டிங் பிடித்துள்ளது, பிறகு பவுலிங் போடும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் அருகே இருக்கும் மரத்திற்கு அடியில் அமர்ந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு திடீரென அவருக்கு மயக்கம் வரவே தன்னை அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அவர் கூறியுள்ளார். மருத்துவமனைச் செல்லும் முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இது குறித்து இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வு நடத்தி இருந்தது. அதில் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அடுத்த ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், கடுமையான வேலையைத் தொடர்ந்து செய்யாமல் ஓய்வு எடுக்கவும் வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News