பொறியியல் கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்..!

இந்த ஆண்டு பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது.

Update: 2024-08-25 05:11 GMT

பொறியியல் மாணவர்கள் (கோப்பு படம்)

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள, 433 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஓதுக்கீட்டில், 1,79,938 இடங்கள் உள்ளன. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 22ல் துவங்கியது.

சிறப்பு விருப்ப மாணவர்களுக்கு நடந்த கலந்தாய்வு முடிவில், தங்களுக்கான படிப்புகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்த, 836 மாணவ, மாணவியருக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 29ல் துவங்கி, இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது.

இதில், பொதுப்பிரிவில் 62,802 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், 8,308 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, மொத்த இன்ஜினியரிங் இடங்களில் தற்போது வரை, 71,946 இடங்கள் நிரம்பி உள்ளன. இது, மொத்த இடங்களில், 39 சதவீதம்.

இதுவரை நிறைவடைந்துள்ள கலந்தாய்வுகளின்படி, அண்ணா பல்கலையின் கிண்டி வளாக கல்லுாரி, எம்.ஐ.டி., உள்ளிட்ட நான்கு கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் 14 கல்லுாரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பி உள்ளன.

மேலும், 57 கல்லுாரிகளில், 80 சதவீத இடங்களும், 114 கல்லுாரிகளில், 50 சதவீத இடங்களும், 197 கல்லுாரிகளில், 10 சதவீத இடங்களும் நிரம்பி உள்ளன. அதேநேரம், 30 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News