'டிஜிட்டல் கல்வி அவசியம்' : JKKN கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பேச்சு
graduation day in jkkn arts and science college-குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனத் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை தலைமை தாங்கினார். இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார். கல்லூரியின் டீன் டாக்டர்.பரமேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் முனைவர்.சீரங்கநாயகி வரவேற்று கல்லூரி அறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். ஜெகநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, ' இளைஞர்களை சமூகப்பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு அளப்பரியது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவில் உயர்கல்வி சமூகத்தின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், நகரமயமாக்கல் போன்றவற்றில் புரட்சிகரமான மாற்றம் உருவாகி வருகிறது.
இந்திய உயர்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது பெரும் சவாலாகும். உயர்கல்வியில் தரம், சமூக-பிராந்திய ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகள் உள்ளன. இளைஞர்கள் சமூக, உணர்ச்சி, உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை பல்வேறு வகையில் எதிர்கொள்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்களாகவும், கற்கும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கைத் திறன் தகவல் தொழில்நுட்பத் திறன் விமர்சன சிந்தனைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
மேலும் தொழில் தவிர சமூக விழிப்புணர்வும் தனிநபர்களின் பன்முகத்தன்மையை மதிக்கின்ற குணத்தையும் பெற்றிருக்க வேண்டும். மற்றவர்களுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி உத்தியுடன் செயல்படுவது இளைஞர்களை எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்கும். இன்று பட்டம் பெறும் மாணவ,மாணவிகளுக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.'
இவ்வாறு அவர் பேசினார். பின்னர், இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் சுமார் 1150 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில், கல்வி நிறுவன பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள், கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.