நம்ம காலுக்கு கீழே எத்தனை அணுகுண்டுகள்?

சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி கொண்டிருக்கும் ஒரு பதிவு நம் வாசகர்களுக்காக அப்படியே தந்திருக்கிறோம். படிங்க...கலக்கமாக இருக்கும்..

Update: 2024-07-30 05:04 GMT

அண்ணா பல்கலைக்கழகம் (கோப்பு படம்)

கல்லுாரி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர் தான் இவ்வளவு துல்லியமாக எழுதியிருக்க வேண்டும். இனி பதிவை பார்க்கலாம்.

இப்போ வரைக்கும் எதுவும் புரியல, தலை சுத்துது, பல வருடங்கள் போராடியும் ஒருவரால் கல்லூரியில் பேராராசிரியராக வேலையில் சேர முடியவில்லை.

ஸ்லட், நெட் தேர்ச்சி , பிஹைச்டி, கைவசம் பல ரிசர்ச் பேப்பர்கள் இத்தனை தகுதிகளை தன் வசம் வைத்திருந்தும் தலையால் தண்ணி குடித்து பார்த்தும் கடைசி வரை கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைக்காமல் அஞ்சுக்கும் பத்துக்கும் கிடைத்த வேலையில் ஒட்டி கொண்டு காத்திருந்து காத்திருந்து வாழ்வை தொலைத்தவர்கள் பலர்.

அப்படி பல லட்சம் பேர் உள்ளனர். ஆனால் ஒருவரால் ஒரே சமயத்தில் 32 கல்லூரிகளில் முழு நேர பணியாளராக பணியாற்ற முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

தலை சுத்துதுல...

ஒரு வேலைக்கே வழியை காணோம், எப்படி 32?

எப்படி வேலை கிடைச்சுது? எப்படி ஒரே நேரத்தில் பல இடங்களில் வேலை பார்க்கிறாங்க, எப்படி சம்பளம் வாங்குறாங்க, ஒரு மாச சம்பளம் குறைந்தபட்சம் எண்பதாயிரத்திற்கும் மேல்... வச்சாலும், ஆத்தாடி...

எப்படி எப்படி என்ற கேள்வி மண்டையை குடைகிறது இல்லியா?

இப்படி ஒரே நேரத்தில் பல கல்லூரியில் 356 போர்ஜரி பேராசிரியர்கள் இருக்கிறாங்கன்னா அதிர்ச்சியா இருக்குதுல...

உயர் கல்வி துறை அமைச்சர் யாருங்க ? பொன்முடி... அதாவது கவர்னரை ‘‘போய்யான்னு திட்டுனாருல்லா’’ அந்த பொன்முடி...

ஆச்சா?

கவர்னர் யாரு?

பல்கலைகழகங்களின் வேந்தர்...

லைட்டா லிங்க் ஆகுதா?

ஆகும் ஆகும்...

சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அனுப்பிய பல்கலைகழக துணை வேந்தர்கள் பட்டியலை கவர்னர் திருப்பி அனுப்பினாரே நியாபகம் இருக்கா?

இனி தமிழக அரசே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் தலைமையில் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கே அனுப்பினார்களே அதுவாவது நியாபகம் இருக்கா?

இல்லியா, சரி விடுங்க...

கவர்னர் தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களை ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என்று ஒரு நீள பட்டியலை காட்டி ஒப்பாரி வைத்தார்களே அதில் நீட் ரத்து மசோதாவுக்கு அடுத்து இந்த மசோதா தான், அதுவாவது நியாபகம் இருக்கா?

இப்போ கவர்னர் - பல்கலைக்கழக துணை வேந்தர் - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி - முதல்வர் ஆகியோருக்கு இடையில் ஒரு மெல்லிய சங்கிலி தெளிவா தெரியுதா?

சரி, இனி விஷயத்துக்கு வருவோம்...

எந்த தொழிலை விடவும் கொஞ்சமும் சளைத்ததல்ல கல்வி தொழில் (சட்டவிரோத தொழில்களில் கூட இவ்வளவு பணம் புரளாது). இன்று நாட்டில் கல்வி தந்தைகளாக வலம் வரும் அத்தனை பேரும் அரசியல் பேக் கிரவுண்ட் கொண்டவர்கள் தான். மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் அத்தனையும் ஆளும் கட்சி பிரபலங்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினர் வசம் தான் இருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்வதானால் பொறியியல் கல்லூரிகள்.

தமிழ் நாட்டில் இருக்கும் மொத்த பொறியியல் கல்லூரிகளில் செயல்பட தகுதி வாய்ந்தவை எத்தனை என்று பார்த்தால் ஐம்பது கூட தேறாது. ஆனால் இன்றைய தினப்படி 526 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன.

சராசரியாக ஊருக்கு பத்து கல்லூரிகள் கூவி கூவி கல்வி வியாபாரம் செய்து வருகிறது. அதில் படித்து பட்டம் வாங்கி வெளியே வரும் மாணவர்கள் தரம் என்னவென்று பார்த்தால் சீரோதான். கடந்த ஆண்டு பொறியியல் தேர்வு முடிவுகளில் எண்பதாயிராம் மாணவர்கள் சிங்கிள் டிஜிட்டில் மார்க் வாங்கி பெயில் ஆகியுள்ளார்கள் என்றால் கல்வியியின் தரம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.

எதனால் இந்த பிரச்சனை?

எதுவுமே அரிதாக இருக்கும் வரையில் மட்டுமே அதற்கு மவுசு அதிகம் இருக்கும். பொறியியல் படிப்பும் அப்படித்தான். விரல் விட்டு எண்ணும் அளவிலான எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கும் வரையிலும் அவற்றின் தரம் நன்றாகவே இருந்தது.

தனியார் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க போட்டி அதிகமானது. போட்டியை சமாளிக்க கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயம். கட்டணம் குறையும் போது வருமானம் குறையும்.

எனவே கல்லூரியின் உள் கட்டமைப்புகள், கல்வி, தரமான ஆசிரியர்கள் நியமனம், கட்டிட பராமரிப்பு போன்றவற்றை நிர்வாகம் செய்வதில் நிறைய சிக்கல்கள்.

ஆனால் பல்கலைக்கழக துணை வேந்தர் தலைமையில் அமைக்கப்படும் சிண்டிகேட் ஒரு குழு அமைத்து அந்த குழுவானது அவ்வப்போது கல்லூரிகளின் அடிப்படை கட்டமைப்புகள் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து சான்று வழங்கினால் மட்டுமே கல்லூரி மேற்கொண்டு இயங்க முடியும்.

இப்போ ஒரு விஷயம் கவனியுங்கள், ஏன் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு வேண்டும் என்று தமிழக அரசும், முதல்வரும் ஒற்றை காலில் நிற்கிறார்கள் என்று.

இதே தமிழக அரசு முதல்வரின் மகன் உதயநிதியை கூட ஒரு முறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கும் முன் பல்கலைக்கழக கழக துணை வேந்தராக நியமனம் செய்ய முன்மொழிவு அனுப்ப அதை இதே கவர்னர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பினார் என்றால் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியின் அதிகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பல்கலைக்கழக துணை வேந்தராக வேண்டிய ஒருவரை நியமித்துக் கொண்டால், அவர் தனக்கு சாதகமானவர்களை சிண்டிகேட் மெம்பெர்ஸ் ஆக்கிக் கொள்வார். எந்த கல்லூரியும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்துக்கு ஆட்டம் போடலாம்.

இந்த பெருமைக்கு எருமை மேய்கிறதுன்னு சொல்வாங்களே, அப்படி கல்லூரி ஆரம்பித்து விட்டு இப்போது அதைத்  தொடர்ந்து நடத்தியாக வேண்டிய நிர்பந்தம் பலருக்கு.

ஒரு பல்கலைக்கழகம் அந்தஸ்த்தில் இருக்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் பல்கலைக்கழக அந்ததஸ்த்தை மெயின்டெயின் செய்ய வேண்டும் என்றால் இந்தந்த கல்லூரிகள் அதில் அங்கமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. அதே போல ஒவ்வொரு கல்லூரியிலும் இந்தந்த அடிப்படை தகுதிகள், இருக்க வேண்டும் என்பது அவசியம்.

உதாரணமாக பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிகல் பாடப்பிரிவு இருந்தால் அறுபது மாணவர்களுக்கு ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் ஒரு பேராசிரியர் இருக்க வேண்டும் என்ற விதி உண்டு. ஆனால் அந்த பிரிவில் வெறும் 10 மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

பத்து மாணவர்கள் கட்டணத்தை வைத்து எப்படி பேராசிரியர்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்து கட்டி மேய்ப்பது? அதே சமயம் அந்த பிரிவை மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று சரண்டர் செய்து விட்டால் மீண்டும் உரிமம் வாங்குவது கடினம். எனவே பெயரளவில் ஒருவரை பேராசிரியராக நியமனம் செய்து விட்டு, அந்த கல்லூரியில் இருக்கும் பிற பேராசிரியர்கள் மூலம் அந்த பிரிவை சமாளித்துக் கொள்வார்கள்.

அதாவது ஆவணங்கள்படி தேவையான பேராசிரியர்கள் இருப்பார்கள், ஆனால் கல்லூரியில் அவர்கள் இருக்க மாட்டார்கள். அதாவது இருக்கும், ஆனால் இருக்காது...

இந்த போலி ஆவணங்களுக்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. தங்கள் பெயர், படம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி கொள்ள முழு உரிமையை கல்லூரி நிர்வாகத்திற்கு கொடுத்து விடுவார்கள். அதற்கு சன்மானமாக ஒரு தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.

அதற்கு பிரதி உபகாரமாக எப்போதெல்லாம் அந்த பல்கலைக்கழக உயர் மட்ட குழு ஆய்வுக்கு வருமோ அப்போதெல்லாம் ஒரு நாள் முதல்வர் போல இந்த போர்ஜரி ஆசாமிகள் ஒரு நாள் பேராசிரியர் வேஷம் போட வேண்டும்.

அந்த ஒரு நாள் கூத்துக்கு லம்பாக ஒன்று முதல் இரண்டு லட்சம் வரைக்கும் வாங்கி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு அடுத்த நாள் எந்த கல்லூரியில் ஆய்வு நடக்குமோ அங்கே வேஷம் கட்ட போயிடலாம்.

நல்லாருக்குல்ல பிசினஸ்...

இதற்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்கத்தான் ஆளுநர் அரசுக்கும், உயர்கல்வித்  துறை அமைச்சருக்கும் அழைப்பின்றி பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடை உதகையில் நடத்தினார். அதில் ஆளும் கட்சி சார்புடைய துணை வேந்தர்கள் பலர் கலந்து கொள்ளவுமில்லை.

இப்படி உயர் கல்வித்  துறையில் நடக்கும் முறை கேடுகள் ஏராளம். இன்னும் தோண்டப்  போனால் மற்றவற்றை விட பேரதிர்ச்சி தரும் விஷயங்கள் பல வெளியே வரலாம். ஆனால் ஒரு விஷயம் நியாபகம் வச்சிக்கோங்க, இது இன்று மட்டும் நடக்கும் முறைகேடு அல்ல, காலம் காலமாக நடந்து வரும் முறைகேடுகள். இன்று திமுக என்றால் நேற்று இதை செய்தது அதிமுக என்பதை மறந்து விட வேண்டாம்.

இன்னும் இப்படி எத்தனை அணு குண்டுகள் நம் காலுக்கு அடியில் புதைக்கப்பட்டு கிடக்கிறதோ, அவையெல்லாம் எப்போது வெடிக்குமோ.?

பிற்சேர்க்கை 

சென்னை பெருநகரத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள், போகிறார்கள். அவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார் என்று எல்லோருக்கும் அடையாளம் காண முடியாது. ஆனால் நகர பேருந்துகளில் நடத்துனருக்கு பேருந்தில் ஏறும் பிக்பாக்கட் காரனை சரியாக தெரிந்து வைத்திருப்பார். 

அதனால் பேருந்தில் நாம் ஏறும்போதே 'உள்ளே பிக்பாக்கெட் காரன் இருக்கான்.உஷாரா இருந்துக்கோங்க' என்று எச்சரிக்கை செய்வதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அதுபோல இந்த விஷயத்துக்கும் ஒரு  நடத்துனர் தேவையாக இருக்கிறார்.

Tags:    

Similar News