கோவை சம்பவத்தை அரசியலாக்க கூடாது; எம்.பி கனிமொழி

Fire Accident News -கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது என, துாத்துக்குடியில் எம்.பி கனிமொழி கூறினார்.

Update: 2022-10-28 05:00 GMT

துாத்துக்குடி எம்.பி. கனிமொழி 

Fire Accident News -சில தினங்களுக்கு முன், கோவை, உக்கடம் கோட்டை மேடு, ஈஸ்வரன் கோவில் அருகில், சிலிண்டர் வெடித்து கார் சின்னாபின்னமானது. காரில் இருந்த வாலிபரும் பலியானார். போலீசாரின் விசாரணையில், காரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து, கார் தீப்பிடித்து வாலிபர் பலியானது தெரிய வந்தது. இந்த சம்பவம், கோவையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்த தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, உடனடியாக சென்னையில் இருந்து, கோவைக்கு சென்று சம்பவ இடத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டார். துணை ராணுவ படையும், கோவைக்கு வரவழைக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினர். முக்கிய இடங்களில், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய, ஐந்து பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். கோவையில் கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கிய இடங்களில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த இக்கும்பல் திட்டமிட்டிருந்தது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. வெடிபொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து, கொரியரில் வாங்கியதற்கான ஆதாரங்களும் சிக்கியது. இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. எனினும் கோவை சம்பவம் குறித்து பா.ஜ.க, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இதை அரசியலாக்க வேண்டாம் என கனிமொழி எம்.பி கூறினார்.

துாத்துக்குடியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர், இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி இலங்கை தமிழர்களின் பாரம்பரிய உணவான ஓலைப்புட்டு தயாரித்து விற்பனை செய்வதற்காக உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகத்தை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெண்கள் நடத்துகின்றனர். தி.மு.க. தமிழை அழிப்பதாக கூறி, ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். யார் தமிழை வளர்க்கிறார்கள், யார் தமிழை அழிக்க நினைக்கிறார்கள் என்றும், தொடர்ந்து எங்கள் மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்று படிக்க முடியாத நிலையை யார் உருவாக்கி இருக்கிறார்கள் என்றும் மக்களுக்கு தெரியும். யார் தமிழர்களுக்கு எதிரானவர்கள், தமிழ் மொழிக்கு எதிராக இந்தியை கொண்டு வந்து மறுபடியும் திணிக்கும் முயற்சியை யார் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு தெளிவாக தெரியும்.

கோவையில் நடந்துள்ள சம்பவம், யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதற்கு முதல்வர் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு நடந்து விட்டது. அதில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. பா.ஜனதா இதனை தொடர்ந்து அரசியலாக்க வேண்டும், மக்களுக்கு இடையேயான காழ்ப்புணர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது மிக தவறானது. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News