கும்பகோணம் ரயில் நிலையத்தில் தேசிய கொடியை அவமதித்தவர் கைது

கும்பகோணம் ரயில் நிலையத்தில் தேசிய கொடியை அவமதித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-12-20 15:44 GMT

கும்பகோணம் ரயில் நிலையத்தில் தேசியக் கொடியை அவமதித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் செங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன் (வயது 32 ).குறும்பட இயக்குனரான இவர் கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தனக்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துவிட்டு சென்னை செல்வதற்காக நேற்று கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தார்.

அப்போது ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு நபர் உன்னிகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் உன்னிகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரிடம் இருந்த தேசிய கொடியை பறித்து குப்பைத்தொட்டியில் வீசி உள்ளார் இது குறித்து உன்னிகிருஷ்ணன் கும்பகோணம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவிடைமருதூர் அருகே உள்ள அனகோடி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52 )என்பது தெரிய வந்தது. இதை யடுத்து அவர் மீது தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News