பெற்ற குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்த தாய் பெங்களூருவில் கைது

Bengaluru /arrests mother who killed newborn child and locked her in a suitcase

Update: 2024-01-09 15:13 GMT

தான் கொலை செய்த குழந்தையுடன் தாய் சுசனா சேத்.

4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் பெங்களூருவுக்கு கொண்டு வந்த தனியார் நிறுவன பெண் அதிகாரியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பெற்ற குழந்தையையே கொலை செய்த அந்த கல் நெஞ்சம் படைத்த தாய் பற்றி இனி பார்ப்போமா?

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றி வருபவர் சுசசனா சேத்(வயது39). இவர் கடந்த 6ம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார்.

அப்போது அந்த பெண் தங்கியிருந்த ஒட்டல் அறையை ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டல் நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது.

மேலும், சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை காரை தயார் செய்து கொடுக்கும்படி ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டதையடுத்து தயார் செய்து கொடுத்துள்ளார். அதன்படி வந்த டாக்சியில் சுசனா சேத் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்து சென்ற காட்சிகளையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறினார். பின்னர், ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார்.

அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீசார் சோதனை செய்தபோது காரில் இருந்த சூட்கேஸை சோதனை செய்த போது அவரது மகனின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சுசசனா சேத்தை கைது செய்தனர்.

சுசனா சேத் தனது குழந்தையை கொன்றதற்கு காரணம் ஈகோ பிரச்சினை தான். கணவருடன்  ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுசனா சேத் தனியாக வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. தனது குழந்தை கணவரை சந்தித்து விடக்கூடாது என்ற வக்கிர எண்ணத்தின் காரணமாகவே கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல் கொலை செய்து உள்ளார் என்பது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News