ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசில் சிக்க போகும் பிரபல ரவுடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசில் பிரபல ரவுடி சிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-07-21 15:45 GMT

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங் கொலை  வழக்கில் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளதால் அடுத்து பிரபல ரவுடி சிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி, சென்னை பெரம்பூரில் படுபயங்கரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, சுரேஷின் மச்சானான வழக்கறிஞர் அருள், சுரேஷின் காதலியான அஞ்சலை உள்ளிட்டோர் கொலைக்கு சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு கச்சிதமாக நேரத்தைக் குறித்துக் கொடுத்த முக்கிய உளவாளி, ரவுடி திருமலை. ஆம்ஸ்ட்ராங் உடன் எளிதாக பேசக்கூடிய திருமலையை வைத்து பொன்னை பாலு கொலைக்கு ரூட் எடுத்துள்ளார். கொலை நடந்த ஏரியாவிற்கு அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கையை கண்காணித்து வந்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்த ஐந்து கத்திகளை தனியாக ஆர்டர் கொடுத்து, செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் கோடாரி ஒன்றையும் ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கியுள்ளனர். உளவாளி திருமலை கொடுத்த தகவல்களை வைத்து ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பிரபல ரவுடி சம்போ செந்தில்தான்! * ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், கோகுல், மணிவண்ணன் உள்ளிட்ட 9 பேர் ஆம்ஸ்ட்ராங் புதிதாக வீடு கட்டும் பகுதியில் தனி தனி குழுக்களாக பிரிந்து சம்பவத்திற்கு தயாராகினர்.

ஆம்ஸ்ட்ராங்க் இருக்கும் இடத்தை அருள், பொன்னை பாலு சென்ற பைக் கடந்ததும் முதல் ரவுண்டில் இருந்த கும்பலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பைக் நகர்ந்த உடனே, உணவு டெலிவரி பாய் உடையில் இருந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்னை நெருங்கி சாப்பாடு ஏதும் ஆர்டர் செய்தீர்களா? என்று கேட்டுக் கொண்டே அருகில் சென்றுள்ளனர். அதன் பின்னர் 30 நொடிகளில் படுபயங்கர சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உயிர் உடனே பிரிய கழுத்து, பின் தலைக்கு குறி , எதிர் தாக்குதல் செய்யாமல் இருக்க வலது கைக்கு ஒரு குறி, தப்பி ஓடாமல் இருக்க கணு காலுக்கு ஒரு குறி, யாரும் அருகில் வராமல் இருக்க பாதுகாப்பிற்கு இருவர் என்று பக்கவாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையை செய்துள்ளனர். அதிமுக திருவல்லிக்கேணி மேற்குப்பகுதி இணைச் செயலாளராக பொறுப்பில் இருந்த மலர்க்கொடி. புளியந்தோப்பைச் சேர்ந்த பெண் தாதாவான ‘கஞ்சா’ அஞ்சலை. உள்ளிட்ட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். கைதான மலர்க்கொடி கட்டப்பஞ்சாயத்து செய்து லேடி தாதாவாக உலா வந்துள்ளார். 2001-ஆம் ஆண்டு சென்னையில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி தோட்டம் சேகரின் மனைவிதான் இந்த மலர்க்கொடி. கணவன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில், 20 ஆண்டுகள் கழித்து, கடந்த 2021 ஆம் ஆண்டு, மலர்கொடி தனது மகன் மூலமே, குற்றவாளியான மயிலை சிவகுமாரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

மலர்க்கொடி தான் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு வெடிகுண்டு கொடுத்து அனுப்பியுள்ளார். மேலும் இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் பணம் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் அருளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்தது. இவ்வழக்கில் கைதான புளியந்தோப்பை சேர்ந்த பெண் தாதா,‘கஞ்சா’ அஞ்சலை ஆற்காடு சுரேஷின் காதலி ஆவார் இவர், பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியாக பொறுப்பில் இருந்தார். காதலன் கொலைக்கு பழிக்குபழி வாங்க! அவர் கொலை கும்பலுடன் கைக்கோர்த்ததாக கூறப்படுகிறது.

மேலும் கைதானவர்களில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த 37 வயதான ஹரிதரனும் முக்கிய குற்றவாளி ஆவார். வழக்கறிஞரும் அதிமுகவின் கடம்பத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த இவர், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மற்றும் அருளின் நண்பர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கொடூர திட்டத்திற்கு பயன்படுத்திய செல்போன்களை இந்த ஹரிதரனிடம்தான், அருள் ஒப்படைத்துள்ளார்.

கொலைக்கு பின் தடயங்களை மறைக்க, குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்களை உடைத்து சேதப்படுத்தி திருவள்ளுவர் மாவட்டம், வெங்கத்தூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்துள்ளார். ஹரிதரனின் கொடுத்த தகவலில் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர்.

பெண் தாதா அஞ்சலையின் வீட்டில் நடத்திய சோதனையிலும் 5 செல்போன்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பென் டிரைவ், லேப்டாப், ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட செல்போன்கள், அஞ்சலையின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பட்சத்தில் இவ்வழக்கில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் சிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News