குஜராத்திற்கு படகு மூலம் போதை பொருள் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது

குஜராத்திற்கு படகு மூலம் போதை பொருள் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-12 14:52 GMT

குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை ஏற்றி வந்த பாகிஸ்தான் படகை இன்று இந்திய கடலோர காவல் படை சுற்றி வளைத்தது. படகில் இருந்த 6 பாகிஸ்தானியர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். போர்பந்தர் துறைமுகத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் இருந்து அடிக்கடி சட்டவிரோதமாக கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், கடலோர காவல் படையுடன் என்சிபி அதிகாரிகளும் இணைந்து குஜரத் கடலோர பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அரபிக்கடலில் 350 கிலோ மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கு இடமாக பாகிஸ்தான் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த படகை கடல் வழியாகவும் வான்வழியாகவும் இந்திய கடலோர காவல் படை சுற்றி வளைத்தது.

இதையடுத்து, அவர்களின் படகில் சோதனை செய்த போது 80 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன், மதிப்பு ரூ. 480 கோடியாகும். இதையடுத்து, படகில் வந்த ஆறு பாகிஸ்தானியர்களையும் கடலோர காவல் படை, என்.சிபி அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு படை ஆகியவை இணைந்த கூட்டு படை கைது செய்தது. போர்பந்தர் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட பாகிஸ்தானியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்திய கடலோர காவல் படை அடங்கிய கூட்டு படையின் 10வது வெற்றிகரமான ஆபரேஷன் இதுவாகும்.

அரபிக்கடலில் போதைப்பொருள் அதிக அளவில் கடத்தப்படுவதால் கடந்த 3 ஆண்டுகளாக கடலோர காவல்படை, பயங்கரவாத தடுப்பு பிரிவு, என்.சிபி அதிகாரிகள் அடங்கிய கூட்டு குழு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இந்த 3 ஆண்டுகளில் மட்டும் 517 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3,135 கோடியாகும்.

Tags:    

Similar News