சொத்து விவரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்ய வேண்டும்; ஐகோர்ட் உத்தரவு
நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி'யின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, ரூ. 21.29 கோடி கடன் கேட்டிருந்தார். இந்த பணத்தை 'லைகா' நிறுவனம் தந்தது. இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமை, 'லைகா' நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம், 'வீரமே வாகை சூடும்' படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது. இதையடுத்து தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் 'லைகா' நிறுவனம் சார்பில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம், 'வீரமே வாகை சூடும்' படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது.
இந்நிலையில், 'லைகா' தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், விஷால் கொடுக்கவேண்டிய தொகையில் 15 கோடியை ஐகோர்ட்டின் தலைமை பதிவாளர் பெயரில், வைப்பீடாக செலுத்தவேண்டும் என்றும், அந்த வைப்புத்தொகைக்கான ரசீதை தலைமை பதிவாளரிடம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தவில்லை என இன்று விஷால் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது கோர்ட்டு உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை நீதிபதி விஷாலிடம் கேள்வி கேட்டபோது, 'லைகா' நிறுவனம் மேல்முறையீடு சென்றதால்தான் பணத்தை செலுத்தவில்லை. ஒரே நாளில் ரூ .18 கோடி நஷ்டம்; ஆறு மாதமானாலும் திருப்பி செலுத்த முடியாது எனவும் விஷால் தெரிவித்தார்.. இதற்கு 'லைகா' தரப்பில் தொடர்ந்து படங்களில் நடிக்கும் விஷால், தவறான தகவல்களை தெரிவிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டார் .