வெற்றி வந்தால் மாறிவிடுவதா? நடிகர் சிம்பு மீது எஸ்.ஏ.சி பாய்ச்சல்

வெற்றி வந்துவிட்டால் மாறிவிடக்கூடாது என்று, நடிகர் சிம்புவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2021-12-21 13:00 GMT

நீண்ட போராட்டத்துக்கு பின்னர், நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் அண்மையில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில், முதல்வர் வேடத்தில் எஸ்.எஸ். சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, வில்லனாக நடித்த எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு, பலரையும் ரசிக்கச் செய்தது.

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எனினும், நடிகர் சிம்பு, இவ்விழாவிற்கு வரவில்லை. இதற்கு விழா மேடையிலேயே, எஸ்.ஏ. சந்திரசேகர் கண்டனம் தெரிவித்தார்.

அவர் பேசும்போது, மாநாடு திரைப்படத்தின் வெற்றி, நடிகர் சிம்புவிற்கு மிகப்பெரிய திருப்புமுனை. ஆனால், இவ்விழாவுக்கு அவர் வரவில்லை. இன்று படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும். பொதுவாக, நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது. படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால்தான், அவருக்கு வெற்றி தொடரும். சிம்பு இங்கு வராமல் இருப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News