மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்பட டீசர் வெளியீடு..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' பட டீசர் நாளை(8ம் தேதி) சென்னையில் பிரமாண்டமாக வெளியிடப்படுகிறது.

Update: 2022-07-07 14:31 GMT

'பொன்னியின் செல்வன்' டீசர்.

லைகா நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.

எம்ஜிஆர், கமல்ஹாசன் என தமிழ்த்திரைப்பட ஜாம்பவான்களின் கனவுத் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' இயக்குநர் மணிரத்னத்துக்கும் கனவுப்படம்தான். என்றாலும், மணிரத்னத்தின் கனவுதான் தற்போது நனவாகியிருக்கிறது. ஆம். இயக்குநர் மணிரத்னம், அமரர் கல்கி எழுதிய சரித்திரப் படைப்பான 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாக திரைப்படம் எடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியாகிறது. கார்த்தி, விக்ரம், த்ரிஷா, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பலரும் இதில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை (08/07/3022) மாலை சென்னை ட்ரேட் சென்டரில் பிரமாண்டமாக நடக்கிறது. முதலில் தஞ்சை பெரியகோயிலில்தான் பிரமாண்ட அரங்கு அமைத்து விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பல்வேறு செண்டிமெண்ட் காரணங்களால் விழாவின் நிகழ்விடம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாள்தோறும் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி என ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் போஸ்டரும் வெளியாகி வரும் நிலையில், இன்று நடிகை த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திர போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும் குந்தவை நாச்சியாரின் அண்ணன் ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரமும் நடித்துள்ளனர்.

Tags:    

Similar News