விஜயகாந்தின் திரைப்பாதையில் மைல்கற்களை நட்டவர்தான் இப்ராஹிம் ராவுத்தர்

இப்ராஹிம் ராவுத்தர் திருமணம் ஆகாதவர்.மேலும், இவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 முறை துணைத் தலைவராகவும், ஒரு முறை தலைவராகவும் இருந்துள்ளார்.

Update: 2021-07-22 03:37 GMT

இப்ராஹிம் ராவுத்தர்

விஜயகாந்தின் திரைப்பாதையில் மைல்கற்களை நட்டவர்தான் இந்த இப்ராஹிம் ராவுத்தர் காலமான தினமின்று!

கருப்பு எம் ஜி ஆரான விஜயகாந்த் தன் திரை வாழ்க்கையில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த காலத்தில், ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 'பூந்தோட்டக் காவல்காரன்', 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' என விஜயகாந்தின் திரைப்பாதையில் மைல்கற்களை நட்டவர்தான் இந்த இப்ராஹிம் ராவுத்தர்.28 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்

அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு நாடறிந்தது. பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றாய் இணைந்து அலைந்து, திரிந்து, விளையாடி, பிறகு பல கதைகள் பேசியபடியே நடந்து தீராத அவர்கள் இருவரின் செருப்பும் ஒரே போல மதுரையின் வீதிகளில் தேய்ந்தன. அந்தத் தீரா நடைப்பயணங்கள், இருவரும் சென்னை வந்த பின்னரும் தியாகராய நகர், சாலிகிராமம், வடபழனி எனத் தொடர்ந்தன. திரைத்துறையிலும் அவர்களின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருந்தது.

ஒருவர் பாதையில் முட்கள் இருந்தால் மற்றொருவர் அதற்கு மெத்தை விரித்திட, ஒருவருக்கொருவர் படைக்கப் பெற்றவர்கள் எனும் அளவுக்கு அந்த நட்பு இருந்தது. இடையே சில காலம் அந்த நட்பில் ஏற்பட்ட ஒரு சிறிய சலனம் கூட அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த அன்பில் கலந்துவிடவில்லை. இந்த இருவரில் ஒருவரான தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மரணம் தனது 63 வது வயதில்  சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இதே ஜூலை 22 ம் தேதி நேர்ந்தது.

இப்ராஹிம் ராவுத்தர் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 முறை துணைத் தலைவராகவும், ஒரு முறை தலைவராகவும் இருந்துள்ளார்.



Tags:    

Similar News