மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-28 12:43 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது. மாமன்னன் திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.

அதாவது, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என ராமசரவணன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும் எனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் ராமசரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கேட்டதையடுத்து வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஏற்கெனவே 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டது என்றும், எட்டு நாட்கள் மட்டும் தங்களுக்கு நடித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால் அரசியலில் மும்முரமாகிவிட்டதாகவும், மாமன்னன் தனது கடைசி திரைப்படம் என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளதாகவும் ரெட் ஜெயினட் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ வாதிட்டார்.

ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிடெட் கூட்டு நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டும்தான், அதுவும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திடம்தான் என்றும் வாதிட்டார்.

ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் தற்போது பங்குதாரர் இல்லை என்றும் வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாமன்னன் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார். ஏஞ்சல் திரைப்படத்தில் நடித்து தருவது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News