'அண்ணாத்தே'க்கு சிக்கல் -ஐகோர்ட்டில் வழக்கு: ரிலீஸ் ஆகுமா? ரசிகர்கள் அதிர்ச்சி

தீபாவளி நாளில் தியேட்டர்களை மூடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தியேட்டர் இயங்க நீதிமன்றம் தடைவிதித்தால், அண்ணாத்தே ரிலீஸில் சிக்கல் எழும் என்று தெரிகிறது.

Update: 2021-10-30 06:00 GMT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'அண்ணாத்த' திரைப்படம், வரும் 4ம் தேதி தீபாவளி நாளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில், தீபாவளி நாளன்றும், அதற்கு முதன் நாளான நவம்பர் 3ஆம் தேதியும் தியேட்டர்களை மூட உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தூத்துக்குடி சிவமுருகன் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தற்போது திருவிழா காலமாக இருப்பதால் நோய் தடுப்பு வழிமுறைகளை, பொதுமக்கள் பின்பற்ற வாய்ப்பு குறைவு. எனவே, நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் திரையரங்குகளை மூட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுவரை 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்ட தியேட்டர்களில் 100% இருக்கைகள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி, கொரொனா தொற்று எளிதாக பரவ வாய்ப்பு உள்ளதால், மேற்படி நாட்களில் தியேட்டர்களை மூட வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஒருவேளை தியேட்டர்கள் இயங்குவதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தால், தீபாவளி ரிலீஸுக்கு காத்திருக்கும் அண்ணாத்த படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News