மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-12 08:16 GMT

மார்க் ஆண்டனி திரைப்பட போஸ்டர்.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனினின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டு இருந்தார். இருப்பினும், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது எனவும் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது வரை 15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15 ஆம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும், அப்போது தன்னிடம் எந்த நிதி ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த விஷால், அன்றைய தினம் மினி ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர் வினோத்குமாரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவித்து உள்ளதாகவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், செப்டம்பர் 12 ஆம் தேதி நடிகர் விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஆஷா, அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து கடந்த 8 ஆம் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும், மார்க் ஆண்டனி திரைப்பட தயாரிப்புக்கும், நடிகர் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்பதால் மார்க் ஆண்டனை திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். மேலும், நடிகர் விஷால் தனது நான்கு வங்கி கணக்களில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும் சோத்து, அசையா சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஆஷா உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News