இந்தியாவில் புதிய கார்களுடன் களமிறங்கும் ஸ்கோடா

இந்தியாவில் புதிய கார்களுடன் களமிறங்கும் ஸ்கோடா

Update: 2024-02-27 13:30 GMT

இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைகளில் கணிசமான பங்கைக் கைப்பற்ற ஸ்கோடா நிறுவனம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தைகளில் தனது கவனத்தைச் செலுத்தி, விரிவாக்கத் திட்டங்களை வகுத்துள்ள ஸ்கோடா, இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல வகையான புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக மலிவு விலை காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் களம் இறங்க ஸ்கோடா தயாராக உள்ளது.

விலைகுறைவான காம்பாக்ட் எஸ்யூவி ரக கார்கள்

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக காம்பாக்ட் எஸ்யூவி கார்களுக்கான விற்பனை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல கார் நிறுவனங்கள் இந்தப் பிரிவில் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக மாருதி சுஸுகி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் பல்வேறு காம்பாக்ட் எஸ்யூவி கார் மாடல்களை மலிவு விலையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்தப் பட்டியலில் இப்போது ஸ்கோடா நிறுவனமும் இணைகிறது.

இந்திய சந்தையில் இரட்டிப்பு விற்பனை இலக்கு

2026-ம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் தனது விற்பனையை இருமடங்கு அதிகரிக்க ஸ்கோடா நிறுவனம் முனைப்பு காட்டுகிறது. 2023-ம் ஆண்டில் சுமார் 50,000 கார்களை விற்பனை செய்த ஸ்கோடா, வரும் 2026-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 1,00,000 ஆக உயர்த்தும் முனைப்பில் உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு மலிவு விலை காம்பாக்ட் எஸ்யூவி ரக கார்கள் மிகவும் உதவியாக இருக்கும் என ஸ்கோடா கருதுகிறது.

கடும் போட்டி நிலவும் சந்தை

இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர ரக கார்களுக்கான சந்தை மிகவும் சூடுபிடித்துள்ளது. இங்கு சுமார் ஆறு பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான மாடல்களை அறிமுகப்படுத்தி வருவதால், புதிதாக அறிமுகமாகும் சர்வதேச நிறுவனங்களின் கார்கள் போதுமான வரவேற்பை பெறுவதில்லை. குறிப்பாக, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ஜப்பானிய கார் நிறுவனங்கள் பெரும்பாலும் இந்திய சந்தையில் எதிர்பார்த்த வளர்ச்சியைக் காணவில்லை.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தியச் சந்தை

இருந்தபோதிலும், இந்திய சந்தை உலகின் முக்கியமான கார் சந்தைகளில் ஒன்றாக உள்ளது என்பதால் ஸ்கோடா போன்ற பல சர்வதேச நிறுவனங்கள் அச்சந்தையில் தங்களது இருப்பை நிலைநிறுத்த அரும்பாடுபட்டு வருகின்றன. இந்தியா, ஸ்கோடா நிறுவனத்தின் உலகளாவிய சந்தைகளுள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது என்றும், உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இருப்பதால் ஸ்கோடா நிறுவனத்திற்கு இச்சந்தை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஸ்கோடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி காலஸ் ஜெல்மர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் பிரச்சனைகளும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளும்

2023-ம் ஆண்டில் பல்வேறு சப்ளை செயின் பிரச்சனைகள் காரணமாக ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. 2022-ம் ஆண்டில் 53,000 கார்களை விற்ற ஸ்கோடா 2023-ம் ஆண்டில் 48,755 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இருப்பினும், இந்தியாவில் கார்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், இன்னும் பல பிரிவுச் சந்தைகள் விரிவடைய வாய்ப்பு இருப்பதையும் கருத்தில்கொண்டு ஸ்கோடா பல அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறது.

Tags:    

Similar News