இடுபொருளை கட்டாயப்படுத்தி வினியோகித்தால்... வேளாண்துறை எச்சரிக்கை

இடுபொருட்களை கட்டாயப்படுத்தி வினியோகம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று , திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Update: 2022-02-19 00:30 GMT

கோப்பு படம் 

இது தொடர்பாக, திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: உர ஆய்வாளர்கள் தங்கள் வட்டாரங்களில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்கள், உரக் கிடங்குகள், கலப்பு உர நிறுவனங்களை முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உர விற்பனையாளர்கள் மானிய விலை உரங்களை பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி மூலம்,  விவசாயிகளின் ஆதார் எண் மூலமாகவே உரங்கள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமான உரங்களை பரிந்துரை செய்யக்கூடாது. 

எனவே,  விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் கீழ்,  விதிகளை மீறிய செயல்களுக்கு தற்காலிக விற்பனை தடை விதித்தும், உர உரிமம் ரத்து செய்ய வேளாண்மை இணை இயக்குனருக்கு பரிந்துரை செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் உர விற்பனை நிலையங்களில் உரங்களின் விலைப்பட்டியல்கள் விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.

அனுமதி பெறப்பட்ட நிறுவனங்களின் முதன்மை சான்று படிவங்கள் மேலொப்பம் செய்து கொள்முதல் செய்து விற்பனை மேற்கொள்ளப்பட வேண்டும். உர மூட்டையில் குறிப்பிட்டு உள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். இவற்றை பின்பற்றாமல் உரிய ஆவணங்களின்றி உரம் விற்பனை செய்தாலும், இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வினியோகம் செய்வது தெரியவந்தால்,  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News