இன்று, முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Update: 2022-12-05 02:21 GMT

இன்று, தமிழகம் முழுவதும் ஜெ., நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

மக்களால் நான்... மக்களுக்காக நான்!

தமிழக அரசியல் வரலாற்றில், 'அயரன் லேடி' (இரும்பு பெண்மணி) என வர்ணிக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, கட்சியை கட்டுக்கோப்பாக ஆளுமையுடன் வழிநடத்தி, தமிழக முதல்வரானவர் ஜெயலலிதா. அவரது 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். இதற்காக, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடன் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தொடங்கி 'பட்டிக்காட்டு பொன்னையா' வரை 28 படங்களில், எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. அந்த நட்பு தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு கிட்டத்தட்ட அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்தார். தமிழகத்தின் பெண் சாணக்கியர் என ஜெயலலிதாவை, அப்போதைய அரசியல் விமர்ச்சகர்கள் வர்ணித்தனர்.


சட்டசபையில் எதிர்க்கட்சிகளால் அவமானப்படுத்தப்பட்டதால், 'அந்த சட்டசபைக்குள் முதல்வராகதான் நுழைவேன்' என வைராக்கியத்தோடு சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா.

'மக்களால் நான்... மக்களுக்கான நான்' என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக் கொண்டு, அவர் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற முதல்வராக, தமிழகத்தை ஆட்சி செய்தார். பெண்கள் மத்தியில் அபரிமிதமான ஆதரவு பெற்ற ஒரு அரசியல் தலைவியாக விளங்கினார். இந்திய அரசியல்வாதிகள் மத்தியில், துணிச்சல் மிகுந்த ஒரு பெண் அரசியல்வாதியாக அவர், அடையாளம் காணப்பட்டார். அரசியல் கொள்கை முடிவுகளில், அவர் அதிரடி முடிவுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

சினிமா, அரசியல் என தான் சார்ந்த துறைகளில்  சாதனை நாயகியாக வலம்வந்த  ஜெயலலிதா முதுமை காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டார். .

தீவிர சிகிச்சையும் செயல்படாமல் போனதால், 2016ம் ஆண்டு இதேநாளில் காலமானார் ஜெயலலிதா. அதன்படி ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலை 9.30 மணிக்கு, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து, ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். வி.கே. சசிகலா காலை 11 மணிக்கும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 11.30 மணிக்கும் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Similar News