வெண்ணந்தூரில் ரேஷன் அரிசி கடத்தல், 2 பேர் கைது

1.6 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஆறுமுகநயினார் தலைமையில், வெண்ணந்தூர் போலீசாரும் பறக்கும்படை ஆய்வாளர் (ஆர்.ஐ.) முருகேசனும் மதியம்பட்டி ஏரிக்கரையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் 1,610 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கோபால் (44) மற்றும் செல்லதுரை மகன் கோகுல்ராஜ் (24) ஆகியோர் ஆட்டையாம்பட்டி பகுதியில் குடிமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, தொட்டியப்பட்டியில் உள்ள தனியார் கோழிப்பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோபால், கோகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu