நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கக் கவசம், புத்தாண்டு சிறப்பு பூஜை

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கக் கவசம், புத்தாண்டு சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. நாமக்கல் நகரின் மையத்திலுள்ள கோட்டை பகுதியில், நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயார் கோவிலுக்கு எதிரே ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சாந்த சொரூபமாக எழுந்தருளியுள்ள சுவாமிக்கு, விசுவாவசு தமிழ் புத்தாண்டான நேற்று அதிகாலை 6:00 மணிக்கு 1,008 வடை மாலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1,008 லிட்டர் பால், தயிர், சந்தனம் மற்றும் பல நறுமணப் பொருட்களால் திருமஞ்சன அபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் திரை விலக்கப்பட்டு, கோவில் பட்டாச்சாரியார்கள் பல்வேறு வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து, சிறப்பு பூஜை நடத்தினர்.
மகா தீபாராதனையும் நடைபெற்ற நிலையில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு பக்தர்களின் பக்தி பரவசத்தையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu