பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் சட்டத்தில் விலக்கு அளிக்க எம்எல்ஏ கோரிக்கை

சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன்
பட்டாசு தொழிலுக்கு, சுற்றுச்சூழல் சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு, சிவகாசி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், முக்கியமான 10 பிரச்சினைகள் மற்றும் முக்கியமான தேவைகள் குறித்து மனு கொடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் பேரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் முக்கியமான தேவைகள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முதல்வருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து எம்எல்ஏ அசோகன் கூறும்போது, சிவகாசியின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதார சுழற்சிக்கும் ஆதாரமாக இருக்கும் பட்டாசு தொழிலுக்கு, சமீப ஆண்டுகளாக பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பட்டாசு தொழில் தடையின்றி நடப்பதற்கு, சுற்றுச்சூழல் சட்டம் 3 (3பி) -ல் விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் பட்டாசுகள் ஏற்றுமதி செய்வதற்கு, இலங்கை மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களில் தடையில்லா சான்றுகள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டால், சிவகாசியின் பட்டாசு தொழில், தற்போதைய நிலைமையை போல 4 மடங்கு மேலும் வளர்ச்சி பெறும். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, மேலும் கூடுதலாக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறினார்.
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அங்கு சுத்தப்படுத்தப்படும் தண்ணீரை சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வசதியை ஏற்படுத்தினால், அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சிவகாசி அரசு மருத்துவமனையின் தரத்தை மேலும் உயர்த்தி, மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை யாக மாற்றியமைத்தால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி காயம் அடைபவர்களை உடனடியாக சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும் என்றும், இது போன்று சிவகாசிக்கு தேவையான முக்கியமான விசயங்கள் குறித்து, தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்று எம்.எல்.ஏ. அசோகன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu