செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு தாளாளர் டார்ச்சர்: விருதுநகர் கலெக்டர் திடீர் விசாரணை

கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட அருப்புக்கோட்டை தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 48) என்பவர் சில மாதத்துக்கு முன்பு அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது கல்லூரி தாளாளர், வீடியோ காலில் ஆபாசமாக பேசி நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த மாணவியிடம் கல்லூரி தாளாளர் வீடியோகாலில் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களிடையே பரவியது. இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் காலை கல்லூரி மூடப்பட்டது. எனவே கல்லூரி வாசலில் அமர்ந்து மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியிடம் போனில் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி தாளாளரை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கல்லூரி தாளாளர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அருப்புக்கோட்டை, தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார். மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட கல்லூரி தாளாளர், கைதான நிலையில் இந்த விசாரணையை மேற்கொண்டது, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu