கார் கவிழ்ந்து விபத்து -வழக்கறிஞரின் மகன் பலி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 9 வயது சிறுவன் உயிரிழந்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றுபவர் முருகானந்தம். இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் தனது காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது மதுரை தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த முருகானந்தத்தின் 9 வயது மகன் முகேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லாங்கிணறு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மல்லாங்கிணறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu