/* */

ஆயத்த ஆடை மையம் அமைக்க விழுப்புரம் ஆட்சியர் அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் ஆயத்த ஆடை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

ஆயத்த ஆடை மையம் அமைக்க  விழுப்புரம் ஆட்சியர் அழைப்பு
X

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன்

ஆயத்த ஆடை உற்பத்தி மையம் அமைக்க மானியம் பெற விரும்பும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்த செய்தி குறிப்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக தமிழகம் முழுக்க 25 ஆயத்த ஆடையக உற்பத்தி மையம் 25 மாவட்டங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்துக்கு ஒரு குழு வீதம் குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்தலாம்.

தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைத்துள்ள குழுவுக்கு முன்னுரிமை அளிகப்படும். குழுவில் உள்ள 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.குழுவிலுள்ள பயனாளிகள் அனைவரும் பிசி., எம்.பி.சி மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்ததை ("ஜே" பிரிவு) அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியானவை தெரிவு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார் .

Updated On: 9 Sep 2022 12:30 PM GMT

Related News