விழுப்புரத்தில் ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது

விழுப்புரத்தில் ரேசன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது
X

ரேஷன் அரிசி பதுக்கியதாக கைது செய்யப்பட்ட கதிரேசன் 

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை இன்று கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் சிவன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசல் அருகில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கு 86 சாக்கு மூட்டைகளில் 4,300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இந்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த முபாரக் அலி, அவரது மகன் சுபீர் அலி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கதிரேசன் (வயது 29) ஆகியோர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும், இவர்கள் 3 பேரும் வீரமூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை மாவாக்கி வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கதிரேசனை கைது செய்தனர். முபாரக்அலி, அவரது மகன் சுபீர்அலி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture