/* */

பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி, எஸ்பி நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி, எஸ்பி நேரில் ஆஜர்

HIGHLIGHTS

பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி, எஸ்பி நீதிமன்றத்தில் ஆஜர்
X

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன்

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை வருகின்ற 14ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் ஆஜராகினர்.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதோடு இந்த விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்றும் விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த புகார் தொடர்பாக சாட்சிகள் பலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 29-ந் தேதியன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகி, இச்சம்பவம் தொடர்பாக 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன் ஆஜரானார்கள். இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதி முன்பு வாதம் செய்தனர். பின்னர் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்,

மேலும் செய்தியாளர்கள் தங்களை படம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்திற்கு சொகுசு கார்களை தவிர்த்து சாதாரணமான காரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு காத்திருந்த செய்தியாளர்கள் கண்ணில் படாமலேயே நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் டிஜிபி, எஸ்பி ஆகியோர் சென்றனர்.

Updated On: 7 Sep 2021 7:06 AM GMT

Related News