1200 ஆண்டு பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு

1200 ஆண்டு பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு
X

1200 ஆண்டுகள் பழமையான துர்க்கை அம்மன் சிலை.

விழுப்புரம் மாவட்டம், நெமூர் கிராம ஏரியில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை என அழைக்கப்படும் துர்கா சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்டது நேமூர் கிராமம். இது விழுப்புரம் செஞ்சி சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பழமையான சிற்பம் காணப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை குழுவினர் நேமூர் கிராம ஏரிக்கரையில் துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறிந்தனர். இந்த சிற்பம் பல்லவர் காலத்தை சேர்ந்தாக தெரிகின்றது, 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. துர்க்கை என பெயரிட்டு வணங்கப்பட்டு வரும் கொற்றவை வழிபாடு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதாகும்.

அச்சம் தரத்தக்க தெய்வமாக, போருக்கான அதன் வெற்றிக்கான தெய்வமாக கொற்றவை வணங்கப்பட்டாள். நேமூர் ஏரிக்கரையில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பம் கி.பி. 8-9-ம் நூற்றாண்டை (பல்லவர் காலம்) சேர்ந்தது ஆகும். சுமார் 6 அடி உயரமுள்ள பலகைக்கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை தக்க ஆயுதங்களை ஏந்தி, எருமைத்தலையின் மீது நிற்கிறாள். கொற்றவையின் இடது கரத்தின் கீழே மான் காட்டப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரம் சொல்லும் பாய்கலப் பாவையை நினைவூட்டுகிறது. கால்களின் இரண்டு பக்கங்களிலும் வணங்கி பூஜை செய்யும் நிலையில் அடியவர் இருவர் காட்டப்பட்டு இருக்கின்றனர்.

கொற்றவை சிற்பத்தின் அருகிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் 6 முகங்களை கொண்ட சிற்பம் தனிக்கல்லில் காணப்படுகிறது. இது முருகனை குறிப்பதாகும். இந்த சிற்பமும் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். நேமூர் ஏரி மட்டுமின்றி மாவட்டத்தில் தொரவி, மேல் குழந்தை உள்ளிட்ட பெரும்பாலான பெரிய ஏரிகளில் நீர்மட்ட அளவை கணக்கிட இது மாதிரி சிலைகள் அப்போது ஏரி உள்ளே முகப்பில் நிறுவி உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் துக்கையாத்தால் நீரில் மூழ்கி விட்டால், ஏரி நிறைந்து, கோடி போகிறது என கிராம வழக்கில் சொல்வது வழக்கம், அந்த சிலையை (துர்க்கை) என கூறி ஆண்டு தோறும் ஏரியில் நீர் நிரம்பி வடியும் நிலையில் சிலை தெரியும் போது வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story